feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

Saturday 24 October 2009

பயோ-மிமடிக்ஸ் - வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்

பயோ-மிமடிக்ஸ் என்ன இது புதுசா இருக்கே என்று யோசிக்குகிறது தெரியிது அதாவது- பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகும் .இது நான் படித்த பதிவின் சுருக்கம் ஆகும்.

துடைக்கவேண்டாம்

Biomimetic அடுக்குமாடி கட்டிடங்கள் உப்பு பூத்திருப்பதுபோல் கொத்துக்கொத்தாக நிலத்தில் முளைத்திருக்கின்றன. சுவர்களே தெரியாமல் முழுவதும் கருப்புக் கண்ணாடி சன்னல்கள். இப்பொழுதான் துடைத்து விட்டதுபோல பளிச்சென்று இருக்கின்றன. அத்தனை கண்ணாடிகளையும் மனிதனால் தொங்கு சாரம் கட்டி துடைப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. ஆனால் துடைத்துவிட்ட புண்ணியம் சற்று முன் பெய்த சின்ன மழைக்குச் சாரும்.

மழைக்கு முன் சேரிப் பையனின் அழுக்கு முகம்போல தூசிபடிந்திருந்தது. சோப்பு துணி எதுவுமே இல்லாமல் மனிதக் கரங்கள் படாமல் பெய்த மழையில் நனைந்து அத்தனைக் கண்ணாடிகளும் முகம் துடைத்துக்கொண்டன. இதன் இரகசியத்தை தாமரையிலைகளிடம்தான் கேட்கவேண்டும். தாமரையிலையிலிருந்து இந்தத் தந்திரத்தை விஞ்ஞானம் காப்பி அடித்துக் கொண்டது. இயற்கையை காப்பியடித்து அதைத் தொழில்நுட்பத்தில் புகுத்தும் புதிய கலையை பயோ மிமடிக்ஸ் என்கிறார்கள். நேனோ டெக்னாலஜிக்கு போட்டியாக முளைத்திருக்கும் கல்வியாக இது வளரும் போலிருக்கிறது.

கழுவவேண்டாம்

சப்பானில், ஐந்து நட்சத்திர ஓட்டலில் கழிவறைகளை தினமும் சுத்தம் செய்வதில்லை. குளிக்கும் போது வெளியேறும் தண்ணீர் குளியலறையையும் கழுவிவிடுகிறது. கழிவறையிலும் அதேதான். தரையிலும் கோப்பைகளிலும் அழுக்கே ஒட்டுவதில்லை. கிருமிகளும் வளருவதில்லை. துர்நாற்றமும் உடனுக்குடன் மறைந்துவிடுகிறது. நம்மூர் பொதுக் கழிப்பறைகளை நினைத்துப் பார்க்கும்போது இந்தத் தொழிற்நுட்பம் யப்பானைவிட நம் நாட்டுக்குத்தான் மிகவும் அவசியம் என்பது தெரியும்.

நீக்கவேண்டாம்

குளிர்ச்சியான கண்டி,கற்ரன் போன்ற மலைச்சாலைகளில் கார் ஓடிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கண்ணாடிமீது மூச்சுக்காற்றின் ஆவிபடிந்து மங்கலாகிவிடுகிறது. சாலை மசமசவென்று தெளிவில்லாமல் இருக்கிறது. ஓட்டுநர் அடிக்கடி கைத்துண்டால் கண்ணாடியைத் துடைத்து விட்டுக்கொள்கிறார் இது பழையகதை!. இனிவரப்போகும் வாகனக் கண்ணாடிகளில் ஈரமோ நீராவியோ ஒட்டவே ஒட்டாது.

துவைக்கவேண்டாம்

கோப்பையிலிருந்து கோப்பி சிதறி உடுப்பு முழுவதும் பட்டுவிடுகிறது. "அச்சோ கோப்பிக்கறை போகாதே" என்று பதறுகிறார். அது பயோமிமடிக்ஸ் உடுப்பு. கழற்றி உதறினால் போதும்; ஒரு சொட்டு கோப்பிக்கறைகூட இல்லாமல் உடுப்பு பழையபடி புத்தம் புதிதாகிவிடுகிறது. "இந்தச் உடுப்பு துவைத்து 6 மாதம் ஆகிறது, அழுக்காகவே இல்லை" என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.

"பயோமிமெடிக்ஸ்" என்பது பயலாஜி + தொழில் நுட்பக் கலவையால் உருவானது. பயோமிமெட்டிக்ஸ் (Biomimetics) என்றால் "உயிரினங்களிலிருந்து தந்திரங்களைக் கற்றுக்கொள்ளுதல் என்று அர்த்தம்.

தாமரையிலைத் தத்துவம்


வில்லெம் பர்த்லாட் (Willam Barthlott, University of Bonn. Germany) என்பவருக்கு தாமரை மலரையும், அதன் இலைகளையும் பார்க்கும் போதெல்லாம் வியப்பு ஏற்படும். சேற்றிலிருந்து தாமரை வெளிப்பட்டாலும் அதன் மீது துளி அழுக்குகூட இல்லாமல் எந்நேரமும் புத்தம் புதிதாக இருப்பதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பார். எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கிக் கருவி மூலம் (Electron Microscope) செடியின் இலைமேற்பரப்பை பார்க்க வேண்டுமானால் முதலில் அதன் மேற்பரப்பை சுத்தமாகக் கழுவவேண்டும். இல்லாவிட்டால் அதிலுள்ள தூசிகளெல்லாம் பெரிய பெரிய பாறாங்கற்கள் போலத் தெரியும். ஆனால் தாமரை இலையை அவர் கழுவவே இல்லை. இருப்பினும் தூசி ஒன்று கூட அதில் காணப்படவில்லை. தெருவில் அத்தனைப் புழுதியிருந்தாலும் எப்படி தாமரை இலை அத்தனை தூய்மையாக இருக்கிறது.இத எங்கட ஆக்கள் எப்பயொ கண்டு பிடிச்சிட்டினம்.அது தான் தாமரை இலையில கோயிலில அன்னதானம் கொடுக்கிறது.இப்ப தெரியுதா என்கட கண்டு பிடிப்புகள்

பயிரியல் படிப்பவர்களுக்குத் தெரியும், இலைகளின் மேலே இருக்கும் மெழுகுப்படலம் தண்ணீரை இலைமேல் ஒட்டாமல் உருட்டி விட்டுவிடும் என்று. உண்மையில் தூசி இல்லாமலிருப்பதற்கு மெழுகுப்படலம் மட்டும் காரணமல்ல என்று பார்த்லாட்டுக்கு எலெக்ட்ரான் மைக்ரோ நோக்கி மூலம் பார்த்த பிறகு தெரிந்தது. மெழுகுப்படலம் வார்னிசு பூசியது போலில்லாமல் வரிசையாக குன்றுகள் இரணுவ அணிவகுப்புபோல அங்கே காணப்பட்டது. இந்த அமைப்புதான் தண்ணீரை உருண்டோடி கூடவே தூசிகளையும் அடித்துச் செல்வதற்கும் காரணம் என்பதும் தெரிந்தது.

தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் பகை என்பது தெரிந்ததே. எண்ணெய்ப் பதார்த்தங்களை நீர்ப்பகைப் பொருள் (Hydrophobic) என்பார்கள். சக்கரையும் உப்பும் நீரில் கரையக்கூடியன எனவே அவற்றை நீர் நட்புப் பொருள்கள் (Hydrophilic) என்பார்கள். நீர் நட்புடைய பரப்பின் மீது ஒரு சொட்டு நீர்த் திவளையை விட்டால் அது விரிந்த தட்டையாக கிடக்கும். திவளையின் விளிம்புக்கும் அது நிற்கும் பரப்புக்கும் உள்ள கோணம் 30 டிகிரியாக இருக்கும். மாறாக கொழுப்புப் பசையுடைய நீர்ப்பகைப் பரப்பின்மீது தண்ணீர் சொட்டு நிற்கும்போது முத்து போல உருண்டையாகத் திரண்டு இருக்கும். அப்போது அதன் விளிம்பு கோணம் 900 டிகிரியாகயிருக்கும்.

பார்த்லாட், தாமரை இலைத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு கண்ணாடிப் பரப்பைத் தயாரித்தார். அது நீருக்குப் பெரும் பகை கொண்டதாக இருந்தது. நீர்த்திவளையானது அந்தப் பரப்பின் நின்றபோது அதன் விளிம்புக்கோணம் 150 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. பார்த்லாட் பூசிய பொருளானது மைக்ரோ நோக்கியளவுள்ள சிறு குன்றுகளை வரிசையாகக் கொண்டிருந்ததால் அதன் மீது நீர்த்திவளையானது உடல் குறுகி ஒன்று திரண்டு நின்றது. பார்த்லாட் இந்த தொழில்நுட்பத்தைப் காப்புரிமை செய்தார். யாரும் அவர் கண்டுபிடிப்பை முதலில் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை. அதே தத்துவத்தைப் பயன்படுத்தி சிலிக்கான் பூச்சு (தாமரையிலை தத்துவ அடிப்படையில்) பூசிய தேக்கரண்டி ஒன்றைத் தயாரித்தார். அதில் தேனை எடுத்து ஊற்றிக் காட்டினார். தேன் ஒரு சொட்டுகூட கரண்டியில் ஒட்டாமல் வழிந்தது. அதன் பின்னர்தான் உலகம் அவரை நம்பியது.

இதே தத்துவத்தில் நேனோகேர் என்ற நிறுவனம் நீர்ப்பகை நூலிழைகளையும் அதன் உதவியால் துணிகளையும் உருவாக்கியிருக்கிறது. நேனோடெக்ஸ் என்று அத்துணிக்கு பேர் வைத்திருக்கிறார்கள். அத்துகிலின் இழைகளில் நேனோ அளவுள்ள தாமரை இலைப் பரப்பு உருவாக்கப்பட்டது. அதில் தண்ணீர் மட்டுமல்லாமல் டீ, காப்பி கறைகள்கூட ஒட்டுவதில்லை. மனத் திருப்திக்காக ஒரு முறை தண்ணீரில் அமிழ்த்தி உதறினால்போதும். நாள் முழுவதும் சீருடையில் இருக்கும் போலீஸ், ராணுவ வீரர்களுக்கு துவைக்கவே தேவையில்லாத உடைகள் தேவைதான். மருத்துவத் துறையிலும் இதற்கு ஏராளமான வரவேற்பு இருக்கிறது.

உச்ச ஈரத்தன்மை

தாமரையிலையின் நீர்ப்பகை குணம் நம்மை ஒருபுறம் திகைக்க வைத்துக் கொண்டிருக்கும்போது, ரோசாப்பூ இதழின் நீர் நட்புத்தன்மை வியக்க வைக்கிறது. சில பொருட்களுக்கு நீரின் மீது அளவற்ற வாஞ்சை காணப்படுகிறது. டைட்டேனியம் என்ற உலோகத்திற்கு வினோதமான பல குணங்கள் ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் அதன் நீர்நட்புக்குணம் குறிப்பிடத்தகுந்தது. டைட்டேனியம் டை ஆக்ஸைடின் மென்படிவத்தை டைட்டேனியா (Titania) என்று அழைப்பார்கள். உருகிய கண்ணாடிக்குழம்பை டின் தகடின் மீது சுடச்சுட வார்க்கும்போது சன்னல் கண்ணாடிகள் உருவாகிறது. அது 5000 டிகிரி செல்சியசுக்குக் குளிர்ந்து கெட்டியாகும் தருணத்தில் டைட்டேனியம் ஆக்ஸைடு கலந்த தண்ணீர்க் கரைசலை அதன் மீது ஊற்றினால் உடனே அது நேனோ படலமாக படிந்து ஒட்டிக்கொள்கிறது. இனி இந்தக் கண்ணாடி மீது நீராவி படியாது; குளிர்காலத்தில் கார்க் கதவை மூடிவிட்டுக்கொண்டு ஓட்டினாலும் டிரைவரின் கண்ணாடிமீது பனிபடராது. அத்தனை ஈரத்தையும் அது உள்வாங்கிக் கொண்டு கண்ணாடியைத் துடைத்த விட்டதுபோல வைத்திருக்கும்.

டைட்டேனியா படிவம் மீது சூரிய ஒளியிலுள்ள புறஊதாக்கதிர்கள் பட்டால்போதும் படிந்துள்ள நீர் ஆக்ஸிஜனாகவும், ஹைட்ராக்ஸில் மூலக்கூறாகவும் சிதைந்துவிடும். ஆக்ஸிஜன் நமக்கு பயனுள்ள வளி என்பது மட்டுமல்லாமல், கூடவே விளையும் ஹைட்ராக்சில் அயனியும் சக்திவாய்ந்த கிருமி நாசினியாகவும் கண்ணாடியில் உள்ள அழுக்குகளை ஆக்ஸீகரணம் செய்து அது அழிக்கும் பொருளாகவும் இருக்கிறது.

சப்பான் நிறுவனமொன்று குளியலறை, பீங்கான்தரை ஓடுகளின் மேலே டைட்டேனியப் படலத்தை பூசி விற்பனை செய்கிறது. டைம்டேனிய குளியலறை டைல்கள் கெட்ட நாற்றமுடைய பொருள்களை உடனுக்குடன் சிதைத்து சுத்தம் செய்துவிடுகிறது. மருத்துவமனை மட்டுமல்ல தூய்மையாக இருக்கவேண்டிய எல்லா அறைகளுக்கும் தானே சுத்தம் செய்து கொள்ளும் டைட்டேனியா டைல்களை தாரளமாகப் பயன்படுத்தலாம்.

பகையும் நட்பும் ஒரேயிடத்தில்

தென் ஆப்பிக்காவில் உள்ள (Namib) நபிப் பாலைவனத்தில் பகலில் வெயில் 50 செ. வரை செல்லும். சாலையில் அப்பளம் பொரிந்துவிடும். அங்கே சொட்டுத் தண்ணீர் கிடைப்பது அரிது. அப்படிப்பட்ட இடத்திலும் கவலையில்லாமல் சில உயிரினங்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றன. ஸ்டெனேகேரா (Stenocara) என்றழைக்கப்படும் ஒரு வண்டு வெப்பம் தாளது செத்து விழும் பிள்ளைப்பூச்சிகளை சாப்பிட்டு பிழைக்கிறது. பிள்ளைப்பூச்சிகள் அங்கே வெப்பம்தாளாமல் சாகும்போது இதனால் மட்டும் எப்படி வெயிலை சமாளிக்க முடிகிறது என்று ஆண்ட்ரியூ பர்க்கா (Andrew R. Parka, University of Oxford 2001) என்பவர் ஆராய்ந்தார். வண்டின் மேல் ஓடுக்கு வெப்பக் கதிர்களை பிரதிபலித்து நீக்கிவிடும் ஆற்றல் இருக்குமோ என்று அவர் சந்தேகப்பட்டார்.

ஸ்டெனோகேரா வண்டின் முதுகு ஓட்டை எலெக்ட்ரான் மைக்ரோநோக்கியில் பார்த்தபோது நுட்பமான நேனோ அளவுள்ள மேடுகள் வரிசையாத் தென்ப்பட்டன. அம் மேடுகளின் உச்சிப்பகுதி மிகுதியான நீர்நட்புக் குணமுடையதாகவும் அடிப்பகுதியானது நேர்மாறாக நீர்ப்பகை குணமுடையதாகவும் இருந்தது. ஏன் இப்படி இரண்டு எதிரும்புதிருமான குணங்கள் ஒரே இடத்தில் காணப்படுகிறது என்று அவர் யோசித்தார்.

இதன் நடவடிக்கையைக் கூர்ந்து பார்த்த பின்னர்தான் சந்தேகம் தெளிவானது. பாலைவனமேயானலும், அங்கேயும் அதிகாலை நேரத்தில் கொஞ்சம் பனிமூட்டம் காற்றில் காணப்படும். இந்த மூடுபனியானது வண்டின் முதுகில் உள்ள நீர்க்கவர்ச்சியுடைய முகடுகளில் படர்ந்து தேங்குகிறது. அதே சமயம் மேடுகளின் கீழேயுள்ள நீர்ப்பகைப்பகுதி நீரை உருட்டிக் கீழே தள்ளமுயலுகிறது. ஸ்டெனோகேரா வண்டு இசுலாமியர்கள் நமாஸ் செய்வதுபோல மணற்பரப்பில் தலையைக் கீழாகவும் உடலை மேலாகவும் வைத்துக் கொண்டு யோகாசனம் பண்ணுகிறது. முதுகில் திரளும் நீரானது முத்தாகத் திரண்டு தலையை நோக்கி உருண்டு நேராக வாய்க்குள் புகுகிறது. முதுகையே நீர் சேகரிக்கும் வாளிபோல மாற்றி வேண்டுமட்டும் நீரைப்பருகி பாலைவன வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது.

கிட்டதட்ட இதே அடிப்படையில் ஒரு சிலிக்கா படலத்தினை உருவாக்கியிருக்கிறார்கள். மேடு பள்ளங்களுக்கு பதிலாக கெமிக்கல் பூச்சு தருகிறார்கள். அஸோபென்ஸீன் (Azobenzene) என்ற கெமிக்கல் மூலக்கூறானது ஒளி பட்டவுடன் மடிந்து குனிந்துகொள்கிறது. இதனால் அதன் நீர் நட்புப் பகுதி வெளிப்படுகிறது. ஒளி மறைந்து இருட்டாகிவிட்டால் உடனே அவை நிமிர்ந்துகொண்டு தனது நீர்ப்பகையுடைய தலைப் பகதியைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட கண்ணாடியின் மீது புறஊதாக்கதிரைப் பாய்ச்சும்போது தண்ணீர் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது; ஒளியை நீக்கி இருட்டாக்கியதும் உறிஞ்சியை நீரை உடனே கண்ணாடி வெளியேற்றி வடித்து விடுகிறது. இந்தக் கண்ணாடிகளைப் பயன்படுத்தி பாலைவனத்திலும் ஈரத்தை வடித்து தேவையான நீரை சேமித்துக் கொள்ளலாம்.

ஈரத்திலும் உலர்ந்திருக்கும்

குளம் குட்டைகளில் மிதந்தபடி வளரும் செடியாகிய பிஸ்டியா, சால்வினியா போன்றவை எப்போதும் ஈரமில்லாமல் துடைத்துக் காயப் போட்டதுபோல உலர்ந்தேயிருக்கின்றன. இதன் தத்துவத்தின் அடிப்படையில் நீரில் மூழ்கி ஆராய்ச்சி செய்பவர்களுக்குத் தேவையான நீச்சல் உடைகளைத் தயாரிக்கலாம். இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் அது நமக்கு நல்ல நல்ல ஆலோசனைகளை அள்ளி அள்ளி வழங்கும். பார்த்துக்கொண்டே இருங்கள் நேனோடெக்னாலஜியை அடுத்து பயோமிமட்டிக்ஸ்தான் உலகை ஆளப்போகிறது.

இதிலயும் எதாவது பாதிப்பு இருக்கு எண்டு பிறகு கண்டு பிடிப்பம்.

Sunday 18 October 2009

மனிதர்களும் மாசுகளும்


ஒரு வீடு அல்லது வாகனம் அல்லது அலுவலக அறை உயர்தர மின்கருவிகளின்மூலம் குளிரூட்டப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்படும் காற்றின் வெப்ப அளவு என்ன என்பதை நினைத்துப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. உள்ளே இருக்கும் வரையில் வெப்பத்திலிருந்து தப்பிப்பதுமட்டுமே நம்முடைய ஆர்வமாக இருக்கிறது. வெளியேறும் வெப்பத்தின் அளவு கிட்டத்தட்ட சாதாரண வெப்பத்தைப்போல மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் என்னும் செய்தி ஆச்சரியத்தைத் தரலாம்.

Man And His Environment வெப்பக்காற்றுப்போக்கியின் அருகே சில நொடிகள் நின்று பார்த்தால் அந்தச் சூட்டை உணரமுடியும். தாங்கிக் கொள்ளவே முடியாத அளவு கடுமையாக இருக்கும். ஒருசிலர் குளிர்ந்த சூழலில் வசதியாக இருப்பதற்காக, வெளியே இருப்பவர்களால் சிறிதும் தாங்கிக்கொள்ள முடியாத அளவு வெப்பத்தை எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெளியேற்றுகிற சூழல்தான் இன்று எல்லா இடங்களிலும் நிலவுகிறது.

எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் ஏற்கனவே வெப்பத்தில் வெந்து கொண்டிருப்பவர்கள்மீது இந்த வெப்பத்தின் கடுமையும் சேர்ந்துகொள்கிறது. மாசுகளையும் பெருகி அளவற்றுப்போன ஊரின் வெம்மை தொடக்கத்தில் நகரவெம்மையாக விரிவடைந்து, பிறகு தேசவெம்மையாகப் படர்ந்து, இன்று அண்ட வெம்மையில் வந்து நிற்கிறது.

அண்ட வெம்மை அதிகரிப்பதைப்பற்றியும் அண்ட வெளித் தூய்மையைப்பற்றியும் இன்று வாய்திறந்து பேசாத நாடே இல்லை. அந்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டது. தூய உயிர்க்காற்று என்பது கூட என்றாவது ஒரு காலத்தில் விற்பனைக்குரிய பொருளாக மாறிவிடுமோ என்று அச்சமாக உள்ளது. அண்ட வெம்மையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிற புள்ளி விவரங்களை ஒவ்வொரு நாடும் கையில் வைத்துக்கொண்டு தீர்வுகாண முடியாமல் இன்று தத்தளிக்கிறது.

ஒவ்வொரு நகரிலும் வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அழற்சியால் துவண்டுபோன நுரையீரல்களுடன் மருத்துவமனைகளின் வாசல்களில் நிற்பது தினந்தினமும் பார்க்கக்கூடிய காட்சியாக உள்ளது. உறக்கமற்ற இவர்களுடைய இருமல்களாலும் பெருமூச்சுகளாலும் இரவுகள் நிரம்பிவழிகின்றன. இன்றைய தேதிக்கு இந்த அளவோடு சுற்றுச்சூழல் மாசுகளின் விளைவுகள் நின்றுள்ளன. நாளை இது இன்னும் விரிவடையலாம். தண்ணீர் வளம் உடனடியாகப் பாதிக்கப்படக்கூடும். அதன் விளைவாக பயிர்வளமும் பாதிக்கப்படக்கூடும். நல்ல பயிர்களை விளைவிக்க முடியாத மலட்டுத்தனத்தால் நிலவளமும் பாதிக்கப்படக்கூடும். தாறுமாறான கடல் கொந்தளிப்புகளும் புயல்களும் பஞ்சங்களும் வெள்ளங்களும் உயிரையே பலிவாங்கத்தக்க நோய்களும்கூட அடுத்தடுத்து உருவாகலாம். நம் வாழ்வின் ஆதாரங்களான நீர், பயிர், நிலம் என ஒவ்வொன்றையும் பாதிப்படையச் செய்தபிறகு நாம் எதைநோக்கி நடக்கப்போகிறோம்? மரணத்தை நோக்கியா? அல்லது வாழ்வைநோக்கியா?

வாழ்வைப்பற்றிய பார்வையில் மாபெரும் மாற்றங்கள் வந்துவிட்டதாகச் சொல்லப்படும் இன்றும்கூட கட்சித் தலைவர்களையும் அதிகாரிகளையும் வரவேற்க ஏராளமான வாகனங்கள் ஊர் எல்லைக்குச் செல்கின்றன. வருகையை முடித்துக்கொண்டு ஊர் திரும்பும்வரை அவர் களோடேயே நகர் முழுக்க சுற்றிச்சுற்றி அலைகின்றன. எவ்வளவு புகை. எவ்வளவு அழுக்கு. எவ்வளவு எரிபொருள். இதைப்பற்றி ஏன் எந்தத் தலைவரும் ஒருவித கட்டுப்பாட்டையும் விதிப்பதில்லை என்பது புரியாத புதிர். வாகனம் என்பது செல்வாக்கின் படிமமாக இன்று பார்க்கப்படுகிறது. வாகன எண்ணிக்கை என்பது ஒரு வகையில் செல்வாக்கின் பரிமாணம். அந்தப் படிமத்தில் திளைக்க எண்ணுகிற மனப்போக்கின் விளைவுகளை ஒருகணமேனும் திளைக்க பார்க்கத் தொடங்கினால் ஒருவேளை அவர்களுடைய அணுகுமுறை மாறக்கூடும்.

எழுபதுகளில் மக்கள்தொகை ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது, குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதமாக நடைபெற்ற பிரச்சாரங்களை நினைத்துப் பார்க்கலாம். நாம் இருவர் நமக்கு இருவர் என்பதிலிருந்து ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்பதுவரை ஏராளமான வாசகங்களைக் கேட்டோம். கால் நூற்றாண்டுக்குப் பிறகு இன்று யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமான கட்டுப்பாடு உடையதாக ஒவ்வொரு குடும்பமும் மாறிவிட்டது.

மக்கள் தொகைப் பிரச்சனைக்குப் பதிலாக இன்று நம்முன் அச்சமூட்டும்வகையில் வளர்ந்து நிற்பது சுற்றுச்சூழல் மாசுப் பிரச்சனை. இந்தச் சூழல்மாசுகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள சில திட்டங்களை வகுத்துப் பின்பற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாக இன்று உள்ளது. குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் போலவே சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டத்தையும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் விதமாக நம்மால் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. தகவல் ஊடகங்கள் வழியாக மாசுக்கட்டுப்பாடு பற்றி எங்கெங்கும் அழுத்தமான பிரச்சாரங்கள் பரவவேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாகனம். அதற்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட வேண்டும்.

ஒரு வாகனம் பயன்படுத்தக்கூடிய எரிபொருளின் அதிகபட்ச அளவு தீர்மானிக்கப்படவேண்டும். ஒரு குடும்பம் அல்லது ஒரு அலுவலகம் ஒரு குளிர்சாதனப்பெட்டியை மட்டுமே பயன்படுத்தலாம். மக்களிடையே இவை விதிகளாக அல்ல, பழக்கமாக படியவேண்டும். இது ஒரு சின்ன ஆலோசனை மட்டுமே. இப்படி ஏராளமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு விரைவாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். பின்பற்றப்படவும் வேண்டும். மாசு உற்பத்திக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடிய நம்முடைய முக்கியமான கடமை இது. இந்த நடைமுறை தாமதப்படுமெனில் மாசு உற்பத்திக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கூட்டம்கூட்டமாக பாதிக்கப்படுவதைத் தவிர்க்க இயலாமல் போய்விடும்.

ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இந்திய நகரங்களின் நடைபாதை ஓரங்களிலும் புறநகர் விளிம்புகளிலும் வசிக்கிற மக்களின் எண்ணிக்கை இன்று பல கோடிகளைத் தாண்டும். மொத்த மக்கள்தொகையில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு மக்களின் தினசரி வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது. ஒவ்வொரு நாளும் வாகனப் புகைக்கும் ஆலைக் கழிவுப் புகைக்கும் இடையேதான் இவர்கள் சுவாசிக்கிறார்கள், நடக்கிறார்கள், உறங்குகிறார்கள். மாசுகள் உருவாக்கத்துக்குக் காரணமானவர்கள் யாரோ ஒரு சிலர். மாசுப்பெருக்க நோய்களுக்குப் பலியாகி உயிரிழப்பவர்கள் வேறு யாரோ ஒருசிலர். இது என்ன சமூகம் அறம்?

மாசுக்கட்டுப்பாட்டுத் திட்டங்களை அறிவிப்பத்திலும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதிலும் அரசுக்குப் பல தயக்கங்கள் இருக்கக்கூடும். அதிகாரம், தேர்தல், வாக்கு, செல்வாக்கு, கட்சி நிதி என ஏதேதோ கணக்குகள் அவர்கள் கைகளைக் கட்டுப்படுத்தலாம். மெல்லக் கொல்லும் நஞ்சென பரவிக்கொண்டிருக்கும் சூழல் மாசுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள நாமே ஒரு சில தீர்மானங்களை வகுத்து கண்டிப்பாகச் செயல்படுத்தத் தொடங்கவேண்டும். எந்தச் சட்டமும் நம்மை வழிநடத்தத் தேவையில்லை மானுட குலத்தின் மீதான அக்கறையே நம்மை வழிநடத்தும் மாபெரும் சக்தியாக இருக்கவேண்டும்..

அயல்நாட்டுத் துணிகள் மீதான எதிர்ப்பை காந்தியடிகள் ஆங்கிலேயர் எதிர்ப்பாகத்தான் அறிவித்தார். அது ஓர் அடையாளம் மட்டுமே. அந்த அறைகூவலைக் கேட்டு இந்தத் தேசத்து மக்கள்தான் தம் வீடுகளில் சேகரித்து வைத்திருந்த அயல்நாட்டுத் துணிகளைக் கொண்டுவந்து நடுத்தெருவில் போட்டுக் கொளுத்தினார்கள். அந்த ஆவேசம் மற்றும் அக்கறையின் கனலை இன்றும் நம் நெஞ்சில் தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதை உணர்த்த சூழல் மாசுகளுக்கு எதிரான திட்டங்களையும் நாம் நிறைவேற்றவேண்டும்.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வாகனம். ஒரு வாகனத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள். ஒரு குடும்பத்துக்கு ஒரு குளிர்சாதனப்பெட்டி. இது ஒரு தொடக்கம்தான். இத்திசையில் இன்னும் வெகுதொலைவு நடந்தோமெனில் நம் தேசத்தில் மாசற்ற சூழலை உருவாக்கமுடியும்.
.

புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?

Green house effect

குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களும் இருக்கின்றன. இந்த வாயுக்கள் கண்ணாடியைப்போல செயல்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்று பெயர் வைத்திருக்கிறோம்.

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பத்தை மண், நீர், உயிரிகள் இவையெல்லாம் உறிஞ்சிக் கொள்கின்றன. உறிஞ்சிக்கொண்டவை போக மீதமுள்ள வெப்பம் பசுமைக்குடில் வாயுக்களால் வான்வெளிக்கே திருப்பிவிடப்படுகிறது. வான்வெளியில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு அதிகரிக்கும்போது, பூமிப்பரப்பை நோக்கி திருப்பப்படும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கிறது. இதனால் பூமி இயல்பைவிட அதிகமாக வெப்பமடைகிறது. புவிவெப்பமடைவது இன்றைய உலகத்தின் தலையாய பிரச்சினையாகிப் போனது இப்படித்தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், காற்று மண்டலத்திற்குள் தொழிற்சாலைப் புகை, வாகனக் புகை மூலம் மனிதகுலம் துப்பும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க வேண்டும்.

இன்னும் அறிந்து கொள்ள: http://www.epa.gov/climatechange/kids/version2.html